இந்திய எதிர்ப்புக்கு சிதம்பர இரகசியமே காரணமாம்


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்தமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என்று நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.என இலங்கையின் அரச ஊடகமான தினகரன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு ப.சிதம்பரம் தெரிவானார். இந்தத் தேர்தலில் ப. சிதம்பரம் மிகவும் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியீட்டினார்.

இந்தத் தடவையும் தனக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியே, தமிழ் நாட்டு மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கு எதிராக இவ்விதம் செயற்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கொண்டுவந்த அழுத்தங்கள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரித்து வாக்களித்தால் தமிழ் நாட்டில் உள்ள தி.மு.க. எம்.பிக்களும் வேறு தமிழ் ஆதரவு எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பர் என்று சிதம்பரம் தெரிவித்த கருத்தை அடுத்தே இந்திய மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்:

  1. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் கோரிக்கைகள்
  2. சும்மா இல்ல.. படிச்சுப் பார்க்கணுங்க
  3. இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் களமிறங்கும் தமிழர்
  4. கருணாநிதியின் இன்னொரு பம்மாத்து நாடகம்
  5. கண்கெட்ட பின் கருணாநிதியின் இன்னொரு சூரிய நமஸ்காரம்

Comments are closed.